Wednesday, 27 September 2017

அவள் அழகி





நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வருடா வருடம் 30 பேர் வீதம் தேர்ந்தெடுத்து இண்டர்ன்ஷிப் வாய்ப்பு அளிப்பதுண்டு.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் அனைவரும் பூனேயில் உள்ள பெரிய பெரிய பல்கலைக்கழகங்களில் இருந்து B.Tech, MCA, M.Tech பிரிவுகளில் 85% மேல் எடுத்த மாணவ-மாணவிகள்தான்.
6 மாத கால இண்டர்ன்ஷிப் முடிந்ததும் பெரும்பாலும் எங்கள் நிறுவனம் அவர்களை பணியில் அமர்த்திக்கொள்ளும்.
இண்டர்ன்ஷிப்க்கு தேர்ந்தெடுக்கும்போது 6-7 சுற்றுகள் கடந்து வந்திருப்பதால் பணியில் அமர்த்தும்போது நிறுவனத்தின் சார்பில் பெரிய நேர்காணல் இருக்காது.
"
எங்கள் நிறுவனம் உங்களை பணியமர்த்த விருப்பப்படுகின்றது உங்களுக்கு விருப்பம் இருந்தால் அடுத்த வாரம் முதல் எங்கள் நிறுவன ஊழியராக இணைந்துக்கொள்ளலாம்" என்று ஒரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பப்படும்.
சில முறை மாணவர்கள் இந்த வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு கூகுள் போன்ற மிகப் பெரிய கனவு நிறுவனத்திற்கு போவதுண்டு.
அந்த மாணவர்களின் திறமை எல்லாம் அபாரமாக இருக்கும். மதிப்பெண்ணுக்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும் நம் கல்லூரி பாடத்திட்டத்திற்கு முற்றிலும் வேறுப்பட்டது.
சென்ற வருடம் வந்த 30 பேர்களில் அவளும் ஒருத்தி.
அவளுடைய பெயரின் முதல் பாதி நமக்கு புரியும்படியான லக்‌ஷ்மிகரமான பெயர். பின்பாதி வாயில் நுழையவில்லை.
என்னுடைய இருக்கைக்கு செல்லும் முன் அவளது இடம் என்பதால் அடிக்கடி கண்ணில் படுவாள். 
பார்க்கும்போதெல்லாம் "ஹாய்" சொல்லிவிட்டு புன்னகையை இலவசமாக வழங்குவாள்.
அழகான முகம். அதனிலும் மேலான அவளது லிப்ஸ்டிக், கண் மை, கொத்தாக நெற்றியில் பாதிவரை வெட்டிய முன்னால் இருக்கும் முடி ஆகியவை அவளின் அழகுக்கு மேலும் அலங்காரம்தான்.
அவளின் மேக்கப் பற்றி எதுவும் குறையாக சொல்ல வரவில்லை. காலை 10 மணிக்குமானாலும் மதியம் 1 மணியானாலும் சாயங்காலம் 5 மணியானாலும் அவளது முகத்தின் சாயப்பூச்சுக்கள் குறையவே குறையாது இருப்பதுதான் ஆச்சர்யம். அவளது முகத்தினைப்போல ஆடைகளும் அவ்வளவு நேர்த்தியாக உடுத்தியிருப்பாள்.
அவளும் 6 மாதங்களின் முடிவில் நிறுவனத்தால் பணியமர வைக்கப்பட்டாள். அடிக்கடி சில சந்தேகங்கள் வந்தால் எங்கள் டீம்மிடம் வந்து கேட்பாள். எந்தவொரு பதட்டமோ பரபரப்போ அழகு என்பதன் திமிரோ இருக்காது.
ஒருநாள் நான் என்னுடன் வேலை செய்யும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
அவன் பூனேவை பூர்வீகமாகக் கொண்டவன். சில மாதங்களுக்கு முன்பு திருமணமானவன்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவள் எங்களை நோக்கி வந்துக்கொண்டிந்தாள். அதே மணம் அதே மேக்கப் அதே சிரிப்பு அதே "ஹாய்".
அவள் கடந்தப்பின்பு அவன் கேட்டான்
"
நல்லா இருக்காளா?"
"
நல்லாதானே இருக்கா" நான் சொன்னேன்.
"அவ கூட பேசுவியா"
"
பேச மாட்டேன். சும்மா ஹாய் மட்டும்"
.
.
.
நீண்ட அமைதி.
நானே அமைதியை உடைத்தேன்.
"
நீ பேசுவியா?"
"
ச்ச ச்ச.. அவள பாக்கவே மாட்டேன்" ஏளனமாக சொன்னான்.
"ஏன் உனக்கு கல்யாணம் ஆனதாலவா?"
"இல்லை இல்லை" சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டான்.
ஒருவேளை முன்பே பழக்கமானர்களோ , எதாவது சண்டையாக இருக்குமோ என்றெல்லாம் என் மனம் யோசித்துக்கொண்டிருந்தது.
அவனிடமே கேட்டுவிட நினைத்து
"
ஏன்" என்றேன்.
"
என்ன ஏன்" புரியாதபடி கேட்டான்.
"
ஏன் அவளுடன் பேச மாட்ட முன்னாடியே தெரியுமா? எதாவது பிரச்சனையா? "
"
இல்ல வேற ஒரு காரணம்"
"
என்ன காரணம்"
"
அவ வேற ஆளு"
"
இன்னொருத்தனுடைய ஆள் என்பதால் பேச மாட்டியா?" ஆச்சர்யமாக கேட்டேன்.
"இன்னொருவனின் ஆள் இல்லை.
வேறு ஒரு சாதியில் ஒரு ஆள்"
அவன் சொல்லி முடித்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
"வேறுசாதியாக இருந்தால் பேச மாட்டியா?"
இப்படியும் இன்னும் சிலர் இருக்கின்றார்களா என்ற அதிர்ச்சிதான்.
"அவள் தாழ்த்தப்பட்ட சாதிக்காரி" மேலும் ஒரு குண்டைப் போட்டான்.
"அந்த பெண் உங்கள் ஊரா?" அதே அதிர்ச்சியுடன் கேட்டேன்.
"இல்லை இல்லை. இங்குதான் முதல்முறை பார்க்கின்றேன் " என்றான்.
"அப்புறம் எப்படி அவள் வேறு சாதி என்று சொல்கின்றாய்?"
"அவள் இருக்கையில் பார்த்தேன்" என்றான் சாதாரணமாக.
"நான் இந்த சாதி என்று திமிராக எழுதி வைத்துள்ளாளா?" கோபத்துடன் கேட்டேன்.
"இல்லை. அவளோட பெயரில் அவ்வளவு தெளிவாக இருக்கே. அவளின் பெயரின் பின்பாதி அவளின் சாதிப் பெயர். நாங்கள் ஒருப்போதும் தீண்டாத ஒரு கேவலமான சாதி. அவளைப்பார்த்து பேசினால் ஒரு மாதிரி இருக்கும். அவளே வந்து எதாவது கேட்டால் எதாவது சொல்லி தள்ளிவிடுவேன்"
எனக்கு பேச்சே வரவில்லை. பெயரின் கடைசிப்பகுதியில் சாதி பின்னோக்கி வருவதன் கொடுமை இன்னும் இந்த நாட்டில் இருப்பது இத்தகைய கொடுமை என்று புரிய சிறிது நேரம் எடுத்துக்கொண்டு என்னிருக்கைக்கு வந்துவிட்டேன். வேலை செய்ய மனமே இல்லை. என் இருக்கையில் எழுதியிருக்கும் என் பெயரினையும் என் பெயரின் கடைசியில் உள்ள என் தந்தையின் பெயரையும் பார்த்துவிட்டு ஒரு பெருமை கலந்த பெருமூச்சிவிட்டேன். 


#நன்றி_பெரியார்


குறிப்பு: பெயரில் சாதி ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் இவ்வளவு  கஷ்டப்பட்டு படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு நிலைக்கு வந்து நன்றாக சம்பாதிக்கும் சூழ்நிலை வந்தப் பின்னரும் ஒருவரின்  சாதியைவைத்து   கீழ்த்தரமாகவே இந்தஉலகம் பார்க்கும்போது அவர்களின் பொருளாதாரத்தையும்  தாண்டி வாழ்க்கையில் அவர்களுக்கு சம உரிமை வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ. எத்தனை பெரியார்கள் வேண்டுமோ. 

மறுபடியும் அவளைப் பார்க்கும்போது அவளது சிரிப்பில் சாதி தெரியவில்லை உடையில் சாதி தெரியவில்லை முகப்பூச்சில் சாதி தெரியவில்லை முக்கியமாக அவளது அழகில் சாதி தெரியவில்லை. இன்னும் அவள் அழகு கூடியேயிருந்தது.

ஆம்.
அவள் எதிலும் தாழ்ந்தவள் அல்ல. அவள் அழகானவள்.